கவிதை

நடனத்தின் முடிவில்

< 1 நிமிட வாசிப்பு

சிறுவயதிலிருந்து எனது கையெழுத்து ரொம்ப மோசம்
இரண்டு வரி நாலு வரி நோட்டுகளால்
பேயோட்ட முயன்றார் எனது தந்தை.
தூரத்தினின்று அம்மா உரையாற்றுவாள் தலையெழுத்தைக் குறித்து
பிறகு எழுதுவேன் விரல்கள் வலிக்க வலிக்க.
அப்புறம் விழுந்தது வருடங்களின் திரைச்சீலை.
இது தட்டச்சு மதத்தின் யுகம்.
ஆறுதலாக இருக்கிறது தட்டச்சுப் பலகைகளுக்கு
கீழ்படியாத நிலக்காட்சிகளைக் காண்பது.
சிறுவர்கள் பறக்கிறார்கள் மிதிவண்டிகளில்.
அவ்வப்போது எனை மெளனத்திற்குள் எறிகின்றது பில்லியன் கிலோ மீட்டர்
தொலைவினில் மரிக்கும் ஏதோவொரு அண்டம்.
ஆனால், எனது கையெழுத்தோ தவ வாழ்க்கையில்
அதுவும் புரியவொண்ணாமையின் கடற்கரையில் குடிலெழுப்பி.
அதன் ஒவ்வொரு எழுத்துள்ளும் ஒரு வினா:
நான் யார்? எனது பொருள் என்ன?
இவ்வெண்ணிற நிலக்காட்சியினூடே எங்குச் செல்கின்றேன்?
எப்போது தொடங்கிற்று
மோனத்துடனான இந்த மகா யுத்தம்?
யாரால் தீர்க்க இயலும் இவ்விடுகதைகளின் அணிவகுப்பை…
ஒருநாள் மொட்டைமாடிக்குச் சென்றிருந்தேன் நாட்குறிப்புடன்.
அங்கமர்ந்து எழுத நினைத்தேன் என்னைப் பற்றி. ஆனால் என்ன எழுத?
‘நான்’ என்றெழுதி பிறகு அழித்தேன்.
பின்னர் மறுபடியும் ஒரு சந்தர்ப்பவாத ‘நான்’.
சற்று யோசித்துக் கிறுக்கினேன் ‘நீ’ என்று. அச்சம்.
இப்பொழுது எனது காகிதம் ஓர் அடர்ந்த கானகம்.
எதுவும் நடக்கலாம் அவ்விடத்தில்.
‘நீ’ துரத்துகிறது ‘நானை’.
முட்கள் கிழிக்க, மூச்சிரைக்க, தூரத்து உறுமல்களினூடே ஓடுகிறது ‘நான்’.
சரீரமே விழியாகப் பதுங்கிக்கொள்கிறது புதர்மறைவினில்.
சரணடைந்து மண்டியிட நினைக்கிறது ஒருகணம்.
திடுமென ஓர் உந்தம்:
அதற்குத் தெரியும் சுற்றிவளைக்கப்பட்டுவிட்டோம் என்று.
ஆயினும் ‘நான்’ வெளியில் வருகிறது, வெறுங்கையுடன்.
பின்பு நடனமாடுகிறது, தயார் என்பதுபோல.
அப்போது கண்டுபிடித்தேன்:
எழுதும்போதெல்லாம் பாழடைந்த இக் கையெழுத்தின் வடிவில்
காட்சி தந்து,
கவலைப்படாதே
நான் இருக்கிறேன் எனச் சொல்வது
யார் என்று.


ஓவியம்: பானு

இதழ் 15 பிற படைப்புகள்

வே.நி.சூர்யா

வே.நி.சூர்யா நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள பறக்கையைச் சேர்ந்தவர். இயந்திரவியல் பொறியியலில் இளங்கலை பட்டம் பயின்றவர். சிற்றிதழ்கள் மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், புனைகதைகள், மொழிபெயர்ப்புகள் என பங்களித்துவருகிறார்.

Share
Published by
வே.நி.சூர்யா

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

11 months ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

11 months ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

11 months ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

11 months ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

11 months ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

11 months ago