கவிதை

ரெபெக்கா எல்சன் கவிதைகள்

< 1 நிமிட வாசிப்பு

தமிழில்: பார்கவி

ரெபெக்கா எல்சன் கனட அமெரிக்க வானியலாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய கவிதைத் தொகுப்பு ‘வியப்பிற்கொரு பொறுப்பு’ (A Responsibility to Awe) என்ற தலைப்பில் இவரின் மறைவுக்குப் பின் வெளியிடப்பட்டது. முடிவிலியைத் தாண்டும் படைப்புமனம் கொண்டு தன் வாழ்நாளின் குறுகிய எல்லைகளைத் தாண்ட முடியும் என்று நம்பியவர். நோய் என்னும் வலியை ஒளி மிக்க சொற்களாக மாற்றிப் பிரபஞ்சத்தை நிறைத்த அறிவியல் கவிஞர்.

மரணபயத்தின் நச்சுமுறி

(Antidotes to Fear of Death)

சில நேரம்
மரண பயத்திற்கு நச்சுமுறியாய்,
நான் விண்மீன் உண்பேன்.

அவ்விரவுகளில், மல்லாந்து கிடந்து,
தண் இருளிலிருந்து அவற்றை உறிஞ்சுவேன்
மிளகின் உறைப்பும் கூர்மையுமாக
அவையனைத்தும், அத்தனையும், என்னுள் புகும் வரை.

சில நேரங்களில்
அதற்குப் பதிலாக
இன்னும் இளமையான வெம்மை மாறா குருதி போன்ற பிரபஞ்சத்துள்
நான் என்னையே ஊற்றிக் கலக்கிறேன்

அது விண்வெளியல்ல, வெறும் வெளி,
இன்னும் உருவாகியிராத விண்மீன்கள் மொத்தத்தின் ஒளி
வெளிச்சப் புகைபனியாக மிதக்கின்றது,
மேலும் நாம் எல்லோரும், எல்லாமும்,
ஏற்கனவே அங்குளோம்
வடிவத்தளைகள் ஏதுமின்றி.

மேலும், சில நேரம்
இப்புவியில் நம் முன்னோரின் நீள் எலும்புகளினருகில்
படுத்துக் கிடந்தால் போதும்:

ஒவ்வொன்றும் ஒரு புதையல் என, பொற்புழு என,
வீசியெறியப்பட்ட நம் மண்டையோடுகளின்
உருளைக்கல் பரப்பின் ஊடாக நடந்துகொண்டே
எண்ணிக்கொள்கிறேன்:
இந்த உமிகளிலிருந்து பிறிந்தவை எவையோ
அவை ஒளிச்சிறகுகளின் மீதேறிப் பறந்துவிட்டன.

****

ஓவியம்: ஊக்ரா

ஒருவேளை நிலவே இல்லை என்றால்?

(What if there were no moon?)

அங்கு மாதங்கள் இருக்காது
ஆழி நிலைத்து நிற்கும்
ஆர்ப்பரிக்கும் பேரலைகள் இருக்காது
ஒளிரிரவுகள் இருக்காது
கண்கட்டு வித்தை காட்டும் விண்மீன்கள்
முகம் இருக்காது
நிலாப்பாடல்கள் இருக்காது
கிரகண கிலி பிடிக்கும்
பூமி எழுவதை
நின்று நோக்க இடமிருக்காது.

பார்கவி

பார்கவி சந்திரசேகரன் வாழ்க்கையின் மீது அபாரமான நம்பிக்கை கொண்ட மெரினாவாசி அல்லது சென்னைவாசி. வழக்கறிஞர். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகிறார். இலக்கியம், இசை மற்றும் நிழற்படக்கலை இவரின் உந்துசக்தி.

Share
Published by
பார்கவி

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

11 months ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

11 months ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

11 months ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

11 months ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

11 months ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

11 months ago